Saturday, 1 June 2024

திரு ஊஞ்சல்


பொன்னிலங்கு ஈழ த்து ராமேஸ்வரப்
பூங்குடியின் பாணாவிடைத்தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதராகி
அரனார் ராமலிங்கேஸ்வரர் மகிழ்ந்தே
கன்னல் தமிழ்த்திரு ஊஞ்சல் தனிிலே வைதி
கழித்தாட ஊஞ்சல் இசை பாடி ஏத்த
வன்ன மருப்பழகனான வாரணனின்
வளம் திகழும் செஞ்சரணம் காப்பதாமே


வேத நாற் பவளத் தூண் விளங்க நாட்டி
விரிந்த சிவா கமல வயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறு மாட்டி
நளின ஓங்காரமெனும் பீடம் தேக்கு
மாதவளாம் பர்வவதர்த்தனியாளோடு
மருவு தமிழ்த்திரு ஊஞ்சல் தனிலே வைகி
தல் நிறை பூங்குடியின் பாணாவிடை
ராமலிங்கேஸ்வரரே ஆடிர் ஊஞ்சல்



அன்பொழுகும் கால் நிறுத்தி ஆத்மஜீவன்
ஐந்து புலன் விட்டமதை ஒன்றாய் சேர்த்து
இன்புற நாற்கரண வட மிழுத்தே மாட்டி
இணைந்த திருவருள் என்ற பீடம் தேக்கி
என்புருக பேரின்ப முத்தி ஊஞ்சல்
எழிலாக ஜீவனவன் ஆடலருள் செய்

இன்பதியாம் பூங்குடியின் பாணாவிடை

ராமலிங்கேஸ்வரரே ஆடிர் ஊஞ்சல்


பனியரவு மதிச்சடையின் குஞ்சியாட 

       பால் வெண்ணீற் றழகினொடு  நுதலு மாட 

குனிவுதவழ் புருவச் செவ்விதழ் களோட 

           குமிழ் இதழின் நகையழகு கொஞ்சி யாட 

புனையு குண்டலங்களுடன் தோடு மாட 

       புலித்தோலின் உரையாடல் பூணூல் ஆட 

இனியபாதிப் பூங்குடியின் பாணா விடை 

          இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


பரைவர்வதவர்தனி மருவி ஆட 

           பாம்பினாபரணங்கள் சுழன்றே ஆட 

வரை கடந்த அருள் நல்கும் வரதம் ஆட 

          வரும் அடியார் பயம் தீர்க்கும் அபயம் ஆட 

நிரைநிரையாய் நின்வாசல் நித்திற்கும் பக்தர் 

            நித்திலம்சேர் ஆனந்த விழிநீராட 

இரைகடல் சூழ் பூங்குடியின் பாணாவிடை 

         இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 



துலங்காரத் துடியதுவும் ஒலித்தே ஆட 

          தீப்பிழம்பின் ஆனந்த ஜோதி கரத்திலாட 

கலங்குவிழி  மானாட மழுவும் ஆட 

        காதல்மிகு பர்வதவர்த்தனியாளாட 

தலங்கரையின்கடலாட  அலைகளோட 

        தந்த முகததைய னவன் கூத்துமாட 

இலங்குபதிபூங்குடியின் பாணாவிடை 

          இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


பனகமணிக்கமலவட மாலை ஆட 

     பர்வதவர்த்தனியாளும் மருவி ஆடக்

கனக வட  அக்கமாலை வடமுமாட 

         கண்டமதில் நீலகண்டம் மிளிர்ந்தே ஆட 

சனக சந்தனர் நால்வர் பாடி ஆட 

            சாரங்கன் பிரமனோடு தேவர் ஆட 

இனமலர்சூழ் பூங்குடியின் பாணாவிடை 

         இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


ஞாயிறு திங் கள் அக்னிக்கண்களாட 

         ஞானியர் போற்று செவ்வாய் முறுவல் ஆட 

தோயு சம்பு தன்கழுத்தில் வியாழன் ஆட 

          திருப்பாத வெள்ளி சிலம்பு மாட 

ஆலவிடை தனிலே ஆசனிக்கும் 

        அம்மை பர்வதவர்த்தினி அருளை அள்ளி 

ஈயுத்தலப்பூங்குடியின்  பாணாவிடை 

     இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


மண்சுமந்த பிட்டுண்ட களைப்பும் தீர 

            மன்னன் ஆராதித்த  ஆதி வழியும் மாறக்

கண்ணெழுந்த குருதிச்சொரி நோவும் ஆறாக்

         கண்ணப்பன் கால் பட தளும்பும் ஆறக்

பண்சுமந்த சுந்தரர் சொற்பித்தம் நீங்க   

            பரவைக்கு  தூது சென்ற பாதம் தங்க 

 அண்ணலருள்  பூங்குடியின் பாணாவிடை 

             இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


தென்னிலங்கை வேந்தனவன் இராவணேஸ்வரன் 

           தினவெடுத்த தோள்களினால் மலையைத் தூக்க 

சென்னியிற் கால் விரலூன்றிச்செருக்கும் தீர்த்துச் 

          செவியார  வீணையிசை கேட்ப்பாய் தேவா 

முன்னிரு மண்டோதரிக்கு மகிழ்ந்தேயருள் 

            மல்கிய ராமலிங்கேஸ்வரனும் நீயே 

இன்னிசை சூழ் பூங்குடியின் பாணாவிடை 

              இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


சங்கரனே சாம்பசிவா ஆடீர் ஊஞ்சல் 

            சாரங்கன் மைத்துனரே ஆடீர் ஊஞ்சல் 

துங்கமுகன் தந்தையே  நீர் ஆடீர் ஊஞ்சல் 

              தோகைவேலன் சீடரே நீர் ஆடீர் ஊஞ்சல் 

திங்களணி  வேனியாரே ஆடீர் ஊஞ்சல் 

             திருக்கைலாசத்துறைவோய் ஆடீர் ஊஞ்சல் 

இங்கிதம்சேர் பூங்குடியின் பாணாவிடை 

             இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல் 


                                                                 வாழி 


மறையோடும் வானவரும் மாரி   வாழி 

   மாதுபர்வதவர்த்தனி அம்மை வாழி 

 குறையேதும் இல்லாத செங்கோல் வாழி 

     குவலயத்தில் மாதரவர் கற்பும் வாழி 

நிறைவெல்லாம் நீடூழி வாழி வாழி 

நெஞ்சமதில் இறைபக்தி பொங்க வாழி 

    இறையருட்பூங்குடிப்  பாணாவிடையும்  வாழி 

   இராமலிங்கேஸ்வரரும் வாழி வாழி 











       










 

 



        



No comments:

Post a Comment